10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15ம் தேதி துவக்கம்
========================================
சென்னை: "பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள், 66 மையங்களில்,
வரும், 15ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடக்கும்"என, தேர்வுத் துறை
வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த மாதம், 27ம் தேதி, பத்தாம் வகுப்பு
தேர்வுகள் துவங்கின. 3,012 மையங்களில், 10.68 லட்சம் மாணவ, மாணவியர்,
தேர்வு எழுதி வருகின்றனர். இது வரை, தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பாட
தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. இந்த இரு தேர்வுகளுமே, பெரும் சர்ச்சையை
ஏற்படுத்திவிட்டன.
தமிழ் முதல்
தாளில், ஐந்து மதிப்பெண்களுக்குரிய, வங்கி சலானை வழங்கவில்லை. விருத்தாசலம்
அருகே, தமிழ், இரண்டாம் தாள் விடைத்தாள் கட்டு, ரயிலில் இருந்து விழுந்து
சேதம் அடைந்தது. ஆங்கிலம் முதற்தாள் தேர்விலும், செஞ்சி அருகே பெரிய
பிரச்சனை ஏற்பட்டது.
ஒரு பார்சலை, பஸ்சில் தவற விட்ட
விவகாரத்தில், இன்னமும், விடைத்தாளை, தேடிக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையே, இன்று கணித தேர்வு நடக்கிறது. 8ம் தேதி, அறிவியல் தேர்வும்,
12ம் தேதி, சமூக அறிவியல் தேர்வுடன், 10ம் வகுப்பு தேர்வுகள், முடிகின்றன.
விடைத்தாள் திருத்தும் பணியை, 15ம் தேதி துவக்கி, 30ம் தேதிக்குள்
முடிக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 66 மையங்களில், இந்தப் பணிகள்
நடக்கின்றன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், விடைத்தாள்
திருத்தும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
வரும், 12ம் தேதி,
விடைத்தாள் திருத்தும் மைய அதிகாரிகள் (டி.இ.ஓ.,), பொறுப்பை ஏற்று,
விடைத்தாள் எண்ணிக்கை குறித்த விவரங்களை சரிபார்க்கும் பணிகளில் ஈடுபடுவர்
என்றும், 15ம் தேதி முதல், விடைத்தாள் திருத்தும் பணிகளில், ஆசிரியர்கள்
ஈடுபடுவர் என்றும், தேர்வுத்துறை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. இதன்
முடிவு, மே மூன்றாவது வாரத்தில் வெளியாகும்.
No comments:
Post a Comment